மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!
மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லும் டிடிவி. தினகரன், முதலில் எங்கே இருக்கிறார் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
உதகைமண்டலம் : மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லும் டிடிவி. தினகரன், முதலில் எங்கே இருக்கிறார் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உதகமண்டலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது : அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு எப்போதும் நிறைவேறாது. இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது கட்சியையும் அழிக்க முடியாது,எங்களிடம் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாதத்தில் ஒற்றுமையாக இருந்து இதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லி ஓய்ந்துவிட்டார். இப்போது ஹவாலா முறையில் வெற்றி பெற்றுள்ள டிடிவி. தினகரன் ஒரு விஷயத்தை இப்போது சொல்லி வருகிறார். மார்ச் மாதத்திற்குள் ஆட்சி இருக்காது என்று 'நீ இருந்தால் தானே ஆட்சியை கலைப்ப, நீயே எங்க இருக்குறன்னு பாத்துக்கலாம்" ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைத்தால் கெட்டுத் தான் போவார்கள்.
கட்டிக்காக்கப்பட்ட இயக்கம்
ஏனென்றால் அதிமுக என்பது பலரும் உயிர்த்தியாகம் செய்து தொடங்கிய கட்சி. 1972 முதல் 2017 வரை பலர் சிறை சென்று அதிமுகவை கட்டிக் காத்திருக்கின்றனர். அப்படி கட்டிக்காத்த நினைக்க இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார். ஜெயலலிதாவின் வழியில் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெ. பிறந்தநாளில் ஸ்கூட்டர் மானியம்
2018ம் ஆண்டு பிப்ரவரி 24ல் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது ஸ்கூட்டர் மானிய விலையில் வாங்குவதற்கான தொகை அளிக்கப்படும். 1 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் அன்றைய தினம் வழங்கப்படும்.
அன்புமணிக்கு பதிலடி
தைப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட வழங்கும் பொங்கல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் அதிமுகவை விமர்சித்துள்ளார். அதிமுக ஐசியூவில் இருப்பதாக அன்புமணி கூறினார்,அவர் டாக்டர் என்பதால் அவர் கண்ணுக்கு அப்படித் தான் தெரியும்.
முதலில் நீங்கள் திருந்துங்கள்
ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் அன்புமணி ராமதாஸ் முதலில் தன் மீது இருக்கும் சிபிஐ தொடர்ந்திருக்கும் ஊழல் கரையை துடைக்க வேண்டும். அதற்குப் பின் சொன்னால் சரியாக இருக்கும், முதலில் அவர் திருந்தட்டும், அதன் பிறகு மற்றவர்களுக்கு அன்புமணி அட்வைஸ் செய்யட்டும் என்று முதல்வர் பழனிசாமி அன்புமணி ராமதாசிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.