இலங்கை சிறையில் வாடும் 61 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 61 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாம்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற, பத்து மீனவர்களை, இலங்கை கடற்படை, கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 61 பேர் மற்றும் 116 படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு காண பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி விடுவதால், அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
எனவே, தமிழக மீனவர்களை பாதுகாக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் மூலம் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.