ஓராண்டில் 3 முதல்வர்கள்.. 100வது நாள்.. பளபளக்கும் அரசு விளம்பரங்கள்.. ஆனால், சாதனை எங்கப்பா??
அதிமுக அரசின் மூன்றாவது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைவதால் அவர் செய்த சாதனைப் பட்டியலை அரசுவெளியிட்டுள்ளது.
சென்னை: அதிமுகவில் பல்வேறு குளறுபடிக்கு மத்தியில் முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் பழனிச்சாமி இன்றோடு 100 நாட்களை நிறைவடைவதால், 100 நாள் சாதனை என்று அரசு விளம்பரங்கள் பளபளக்கின்றன.
அதிமுகவின் "நிரந்த" பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, முதல்வராக 2016ல் மீண்டும் பொறுப்பேற்றார். ஆனால் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த 6 மாதத்தில் மரணமடைந்ததால் ஜெ. தனக்கு அடுத்தபடியாக இரண்டு முறை முதல்வர் வாய்ப்பை அளித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு டிசம்பர் 5ம்தேதி நள்ளிரவில் அந்த வாய்ப்பு மீண்டும்கிடைத்தது.
ஆனால் ஒ.பிஎஸ்ஸின் ஆட்சி 2 மாதங்கள் கூட நீடிக்கவில்லை, சசிகலா முதல்வராகி விடுவாரோ என்று அனைவரும் அஞ்சிய நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் பிப்ரவரி 15ல் சிறை சென்றார் சசிகலா. ஆனால் சிறை செல்லும்போது தனக்கு நம்பகமானவர் என்பதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து விட்டுச் சென்றார் சசி.
100 நாட்கள்
பிப்ரவரி18ம் தேதி ஓ.பிஎஸ் அணியின் எதிர்ப்பு, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு மத்தியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை மட்டும் வைத்து பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராக அமர்ந்தார் பழனிச்சாமி. இன்றோடு அவர் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைகின்றன.
அதிரி புதிரி திட்டங்கள் இல்லை
தொடக்கத்தில் கட்சியில் நிலவிய குழப்பம் ஓ.பிஎஸ் அணியின் நெருக்கடிகளால் சற்று சுணக்கம் காண்பித்த முதல்வர் 500 டாஸ்மாக் கடைகள் மேலும் மூடப்படும், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்ததை தவிர வேறு எந்த "அதிரி புதிரி" திட்டங்களையும் அறிவிக்கவில்லை.
வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சிகள்
ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால் வீடியோ கான்பரன்சிங் மூலம்திட்டங்களைத் தொடங்கி வைப்பார். அதையே பின்பற்றி முதல்வர் பழனிச்சாமியும் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசால் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு, திட்ட விரிவாக்கம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார்.
பெருமைக்காகவா?
முதல்வரின் அதி வேக திடீர் செயல்பாட்டுக்குக் காரணம்100 நாட்கள் நெருங்கும் நிலையில் மக்களுக்கு தான் செய்த செயல் திட்டங்களை தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவே என்பது இன்று வெளிவந்துள்ள அரசு விளம்பரங்கள் எடுத்துச் சொல்கின்றன. அனைத்து தினசரிப் பத்திரிக்கைகளிலும் அரசு சார்பில் இன்று விளம்பரங்கள் பட்டையை கிளப்புகின்றன.
அப்டேட் பட்டியல்
அரசின் கீழ் இயங்கும் 32 துறைகளில் 100 நாட்களில் முதல்வர் பழனிச்சாமி செய்துள்ள பணிகளில் திருமங்கலம் நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவை துவங்கியது முதல் விவசாயிகளின் கடன் தொகை வங்கிகளில் செலுத்தப்பட்டது வரை அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
விடை தெரியாத கேள்விகள்
பள்ளிக்கல்வித் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும் கூட பட்டியலில் சேர்க்க மறக்கவில்லை அதிகாரிகள். இதெல்லாம் சரி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் என்று அறிவித்தாரே ஜெயலலிதா. அதை எப்பஅமல் படுத்தப் போறாங்க, ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் ஏப்ரல், மே மாதத்திற்குள் முழுவதும் வழங்கப்படும்னு சொன்னாங்களே அதுவும் முடிஞ்சுதான்னு தெரியல.
ஸ்டேட்ஸ் என்ன?
துறை வாரியாக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை அரசு விளம்பரப்படுத்தியிருக்கிறது. அதே சமயத்துல அதோட ஸ்டேட்டஸ் என்னங்கிறதையும் போட்டிருந்தா ஸ்டேட் மக்களுக்கு கொஞ்சம் பயனுள்ளதா இருந்திருமே அதிகாரிகளே!