டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...பிரதமருடன் இன்று காலை சந்திப்பு
தமிழக முதல்வர் பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வி.மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தவே பிரதமரை சந்தித்ததாக ஓபிஎஸ் கூறினார்.
ஆனால் டெல்லி சென்று வந்த இரண்டு நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பிஎஸ்ன் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி பாஜகவிற்கு ஆதரவளிக்கும் என்று டுவிட்டரில் தகவல் பதிவிட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தச் செய்தி வேகமாக பரவ அது தவறான தகவல் என்று சொல்லப்பட்டதோடு உடனடியாக அந்த டுவிட்டர் பதிவும் அழிக்கப்பட்டது.
பரபரப்பான இந்தச் சூழலில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் நேற்று மாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமரை முதல்வர் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது வறட்சி நிவாரணம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகள் பிரச்னை குறித்து பல்வேறு மனுக்களை அளிப்பார் என்று தெரிகிறது. மேலும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மோடியுடன் அவர் ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.