அ.தி.மு.க எம்.பிக்களின் 'ராஜினாமா' கதகளி- கடுகடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக எம்பிக்களின் அடுத்தடுத்து ராஜினாமாவை முதல்வர் எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லையாம்.
Recommended Video
சென்னை: அதிமுக எம்பிக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யப் போவதாக கூறுவதால் முதல்வர் எடப்பாடியார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.
'கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடக்கவிருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளாது' என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றன. 'இந்த விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
நவநீதகிருஷ்ணன் பேச்சால் சலசலப்பு
இதனையடுத்து, நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன், ' மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது? எங்களை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துகின்றனர்' எனப் பேசினார். அவரது இந்தப் பேச்சு குறித்துப் பேசிய திருச்சி எம்.பி குமார், ' நவநீத கிருஷ்ணன் பேசியது அவரது சொந்தக் கருத்து' என்றார்.
நவநீதகிருஷ்ணன் போன் சுவிட்ச் ஆப்
'தற்கொலை செய்து கொள்வோம்' என அ.தி.மு.க எம்.பி பேசிய பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக, அ.தி.மு.கவில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான போன்கால்கள் வருவதையடுத்து, செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் நவநீத கிருஷ்ணன்.
ராஜினாமா செய்ய முடிவு
அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். "தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெறாமல்தான் நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட இருக்கிறது. இன்று காலை திருச்சி எம்.பி குமார் உள்ளிட்டவர்கள் முதல்வரிடம் பேசியுள்ளனர். அப்போது பேசிய அவர்கள், ' பதவியில் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை. அதைப் பற்றி உங்களிடம் விரிவாகப் பேச வேண்டும்' எனக் கூற, இதனை எதிர்பார்க்காத முதல்வர், ' நீங்களே முடிவு செய்துவிட்டு என்னை வந்து பார்க்கிறீர்களா? எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். கட்சி வேலைகளைப் பாருங்கள்' எனக் கடுகடுப்புடன் கூறிவிட்டார்.
எம்பிக்கள் திட்டம் வேறு
இதனை எம்.பிக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை" என விவரித்தவர், " முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற காலத்தில், சில எம்.பிக்கள் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டனர். மோடியின் தலையீட்டால் இரண்டு அணிகளும் இணைந்தன. 'இந்த இணைப்பின் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் பதவியில் அமர வேண்டும்' என சில எம்.பிக்கள் எதிர்பார்த்தனர். இதற்கு துணை முதல்வர் தரப்பில் இருந்தும் சில உறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், எம்.பிக்களின் கோரிக்கையை டெல்லி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஐம்பது எம்.பிக்கள் இருந்தாலும் அவர்களையும் பா.ஜ.க எம்.பிக்களாகத்தான் அமித் ஷா பார்க்கிறார். தவிர, தமிழகத்தில் நடக்கும் அரசு ஒப்பந்தப் பணிகளில் எம்.பிக்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் எதுவும் சரியாகச் சேரவில்லை. இதைப் பற்றிக் கேட்டபோது, ' இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அடுத்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நீங்கள்தான் இருக்கிறீர்கள். உங்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுப்பதில் என்ன பலன் இருக்கிறது? பதவிக்காலமே இன்னும் சில மாதங்கள்தானே...' என எதிர்க்கேள்வி கேட்டுள்ளனர்.
கவுரவமாக ராஜினாமா
எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை எம்.பிக்கள் பலரும் ரசிக்கவில்லை. காவிரி விவகாரத்தை, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். அதன் எதிரொலியாகத்தான் எடப்பாடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்" என்றார். " எம்.பிக்களின் மனதில் வேறுவிதமான எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் வந்தாலும் உறுதியாக நாமெல்லாம் வெற்றி பெற முடியுமா? இப்போதே ராஜினாமா செய்துவிட்டால், தொகுதி மக்களை கௌரவமாக எதிர்கொள்ளலாம். தேர்தலிலும் நம்மை வெற்றி பெற வைப்பார்கள்' என நம்புகின்றனர். அதன் விளைவுதான் ராஜினாமா என்னும் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அரசியல்ரீதியாக இவர்களது நோக்கம் வெற்றி பெறுமா என்பது மத்திய அரசு எடுக்கக் கூடிய முடிவில்தான் இருக்கிறது" என்கின்றனர் டெல்டா மாவட்ட அ.தி.மு.கவினர்.