சென்னையில் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் திட்டம்.. ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
முதல் வழித்தடத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகம்
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோநகர் (திருவொற்றியூர்) வரை வழித்தடம் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
3700 கோடி
முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுவிட்டது.
8 ரயில்வே ஸ்டேஷன்கள்
ஒப்பந்தத்தின்படி விரிவாக்க பணிகளை 2 வருடத்துக்குள் ஒப்பந்ததாரர் முடித்து கொடுக்கவேண்டும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 8 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
சுரங்கப்பாதை
அதன்படி சர்.தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய 2 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை வழித்தடத்திலும், மீதம் உள்ள 6 ரயில் நிலையங்கள் பறக்கும் பாதையிலும் அமைக்கப்படும்.
பறக்கும் பாதை
அதேபோல முதல் 2 கி.மீ. தூரம் மட்டும் சுரங்கப்பாதை தோண்டப்படும். மீதம் உள்ள 7 கி.மீ. தூரம் பறக்கும் பாதையாக அமைக்கப்படும்.
தொடக்க விழா
சுரங்கப்பாதை தோண்டும் பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா இந்த பணிகளை தொடங்கி வைக்கிறார்.