நிலக்கரி வாங்கியதில் தமிழக மின்துறையில் ரூ 3000 கோடி முறைகேடு.. அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கம்
நிலக்கரி வாங்கியதில் தமிழக மின் துறையில் 3000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலக்கரி வாங்கியதில் 3000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் ஆவணங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்தினர் நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்திக்காக 2012-16 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நிலக்கரி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆவணங்களை வெளியிட்டனர். இவை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளில் 2.44 மெட்ரிக் டன் நிலக்கரியானது இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரில் அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இப்படி வாங்கப்பட்ட நிலக்கரியில் கொள்முதல் விலைக்கும், சந்தை விலைக்கும் 25% வித்தியாசம் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த 2.44 மெட்ரிக் டன் நிலக்கரியின் விலை ரூ.12,250 கோடி. இதில் தணிக்கை செய்த மத்திய தணிக்கைக் குழு பல முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது.
இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,730 கோடி முதல் ரூ.3,025 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு தமிழகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்திருப்பதாகவும், இது தந்திருக்கும் இழப்பு ரூ.30ஆயிரம் கோடியிலிருந்து ரூ.50ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என டி.ஆர்.ஐ மற்றும் சி.ஏ.ஜி. ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறைகேட்டில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மின்சார வாரிய இயக்குனர் ஞானதேசிகன் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது. இந்த விவகாரம் குறித்து முறையான தகவல்கள் இருந்தும் டி.ஆர்.ஐ மற்றும் சி.பி.ஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்பட்டன. ஆனால், அதற்கான முறையான காரணங்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளன. எங்களுக்குக் கிடைத்துள்ள ஆவணங்களைக் கொண்டு நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.