சென்னையில் விடிய விடிய பெய்த மழை... இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
சென்னையில் நள்ளிரவில் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
சென்னை: சென்னையில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையால், கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்ததுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ.மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.
நேற்று காலை முதல் சென்னையில் வெயில் தலைகாட்டியது. பல பகுதிகளில் சுட்டெரித்தது சூரியன். இதனால் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி மாலையில் மீண்டும் இருட்டிய வானம், இரவில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புறநகர்பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்றே வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் குடியேறினர். வரதராஜபுரத்தில் ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளத்திற்கு படகு மூலம் மக்களை மீட்டனர். இன்றும் பல பகுதிகளில் வெள்ளநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக பல மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.