தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - இந்திய கடலோர காவல்படை மீது வழக்குப் பதிவு
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்தி அல்லது ஆங்கிலம் பேசவில்லை எனக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது இந்திய கடற்படை. இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை எற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே
பாதிக்கப்பட்ட மீனவர் பிச்சை அளித்த புகாரின் பேரில் இந்திய கடலோர காவல்படையினர் மீது தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் எச்சரிக்கை மட்டுமே விடுத்ததாகவும் இந்திய கடலோர காவல்படை விளக்கமளித்துள்ளது.
மீனவர்களிடம் படகை நிறுத்த உத்தரவிட்ட பின்னரும் மீறியதால் எச்சரிக்கை விடுத்ததாக இந்திய கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.