பாஜக அரசின் மதவாதம், தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மா.கம்யூ தொடர் போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன்
மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து தமிழகத்தில் 15ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மே 15 முதல் 30ம் தேதி வரை மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து பிரச்சாரம், காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், பாஜக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டில் தாராளமய கொள்கைகள் வேகமாக பரப்பப்படுவதோடு, மதவாத நடவடிக்கைகளும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது என்றார். தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் பண முதலைகள் மேலும் பணக்காரர்களாக ஆவதாக கூறினார்.
மத்திய அரசின் கொள்கைகளையே தமிழக அரசும் பின்பற்றுவதால் தமிழகத்தின் நிலையும் மோசமடைந்து வருவதால், இந்தப் பிரச்னைகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்பட்டமான பொய்
பாஜக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் 2016ம் ஆண்டில் 400 விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது அப்பட்டமான பொய் என்றார்.
சொத்து மதிப்பு உயர்வு
தாராளமயக் கொள்கைகளை பின்பற்றுவதால் பணமுதலைகள் மேலும் கோடீஸ்வரர்களாகவும், ஏழைகள் வறுமையிலும் தத்தளித்து வருகின்றனர் என்றார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 1 சதவீதம் மேல்தட்டு மக்களுடைய சொத்து மதிப்பு 49 சதவீதமாக இருந்தது. ஆனால் அதே சொத்து மதிப்பு 2 அண்டுகளில் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றார்.
தேசிய பேரிடர் அறிவிப்பு இல்லை
மத்திய அரசு அதிகாரிகள் வறட்சி ஆய்வு செய்த போது நிவாரணமாக சொர்ப்ப தொகை தான் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், தேசிய பேரிடர் மாநிலமாக அறிவித்த நிவாரணம் அளிக்க மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார். எனவே மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மே 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட மார்க்சிஸ்ட் மாநிலக் குழு முடிவு செய்தள்ளதாக தெரிவித்தார்.
வேலை உறுதி
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள கடன்களை ரத்து செய்வதோடு, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை உறுதியளிக்கும் வகையில் 100 நாள் வேலைத் திட்ட நாட்களை 200 நாட்களாக அதிகரித்து குறைந்தபட்சம் ரூ. 400 தினக் கூலி அளிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் மாநில அரசு நீர்நிலைகளை தூர்வாரி, நீர் தேங்கும் திட்டத்தோடு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.