தமிழகத்திலும் போராட்டம்... உடனே களமிறங்கிய போலீஸ்- பலத்த பாதுகாப்பில் கர்நாடகா நிறுவனங்கள்!!
சென்னை: கர்நாடகாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்த நிலையில் உடனே களமிறங்கிய போலீஸ், கர்நாடகா நிறுவனங்களுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆனால் கர்நாடகாவிலோ கன்னட அமைப்பினர் தேடி தேடிச் சென்று தமிழக நிறுவனங்களைத் தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அம்மாநில போலீஸ்.
கர்நாடகாவில் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு தமிழ் அமைப்பினர் கர்நாடகா வாகனங்கள், வங்கிகள், நிறுவனங்களை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா. இந்த ஆலோசனையில் கர்நாடகா வாகனங்கள், கன்னட மக்கள், நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கன்னடர்களின் நிறுவனங்கள், வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கன்னடர்களுக்கு சொந்தமான 170 நிறுவனங்களிலும் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், தமிழகம் முழுவதும் கன்னட நிறுவனங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன; நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பிரமுகர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல், சென்னையில் 280 இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; கன்னடர் மீது தாக்குதல் நடத்தினால் உடனே கைது செய்யப்படுவர் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார். இப்படி முதல்வர் ஜெயலலிதா உடனே களமிறங்கி துரித கதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் கர்நாடகாவிலோ, தமிழர் சொத்துகளும் நிறுவனங்களும் தேடித் தேடி குறி வைத்து தீக்கிரையாக்கப்படுவதும் தாக்கப்படுவதும் போலீஸ் கண்முன்பே நடக்கிறது. அந்த மாநில அரசோ, தமிழர்களைப் பாதுகாக்கிறோம் என கூறிக் கொண்டே அத்தனை தாக்குதல்களையும் தீக்கிரை சம்பவங்களையும் வேடிக்கை பார்க்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.