தேனியில் டிரைவர்கள் ஸ்டிரைக்: ஏலக்காய் தொழில் பாதிப்பு
தேனி: இடுக்கி தேனி மாவட்டத்தில் ஜீப் டிரைவர்கள், தனியார் வேன் டிரைவர்கள், கேரள அரசு அதிகாரிகளின் தேவையற்ற அடாவடி கெடுபிடியைக் கண்டித்து திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், கேரளாவிலிருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு வேலைக்குப் போகும் கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் வேலைக்குப் போக முடியவில்லை. இதனால் கேரள எஸ்டேட் முதலாளிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
தொழிலாளர்கள் யாரும் வராததால், ஏலக்காய் பறிக்கும் வேலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் கெடுபிடி....
ஜீப்கள், வேன்களில் தொழிலாளர்களை அழைத்து வருவது தொடர்பாக கேரள அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக தமிழக டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வணிக வாகனங்கள் அல்லது டூரிஸ்ட் வாகன எண்களுடன் கூடிய வாகனங்களில் மட்டுமே தொழிலாளர்களை அழைத்து வர வேண்டும் என்று கேரள அதிகாரிகள் கண்டிப்புடன் கூறுகின்றனர்.
ஸ்டிரைக்...
இந்த போக்கைக் கண்டித்து அனைத்துத் தனியார் ஜீப் மற்றும் வேன் டிரைவர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கேரளாவில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு தமிழக தொழிலாளர்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வெறிச்சோடிய சாலை....
வழக்கமாக வாகன நெரிசலில் காணப்படும் கம்பம் மெட்டு சாலைவெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த சாலையில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வது வழக்கம். ஸ்டிரைக் நாளையும் தொடரும் என டிரைவர்கள் அறிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு....
நெடுங்கண்டம் என்ற இடத்தில் கேரள அரசு சமீபத்தில் ஒரு ஆர்டிஓ அலுவலகத்தைத் திறந்தது. இங்குள்ள அதிகாரிகள்தான் அடாவடி செய்வதாக தமிழக டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெடுங்கண்டம் சோதனை சாவடி...
குமுளி, மூணாறு, கட்டப்பனை, வண்டன்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள், ஜீப்கள், வேன்கள் மூலம் தினசரி சென்று வருகின்றனர். குமுளி, போடி மெட்டு சோதனைச் சாவடிகளில் டிரைவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுவதில்லை. நெடுங்கண்டம் சோதனைச் சாவடியில்தான் பிரச்சினை ஏற்படுகிறதாம்.
அபராதத்தொகை உயர்வு....
விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத வாகனங்களைப் பறிமுதல் செய்வதோடு ரூ. 6000 முதல் ரூ. 8500 வரை அபராதமும் விதிக்கிறார்களாம் அதிகாரிகள். மேலும், இந்த அபராதத் தொகையை தற்போது ரூ. 12,000 ஆகவும் உயர்த்தியுள்ளனராம்.
பாராபட்ச நடவடிக்கை...
மேலும் வாகனங்களில் கேரள நம்பர் பிளேட் இருந்தாலும், அதன் உரிமையாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏதாவது காரணத்தைச் சொல்லி அபராதம் போடுகிறார்களாம். அதுவே கேரளக்காரர்களின் வாகனமாக இருந்தால் கண்டு கொள்வதில்லையாம். இந்த பாரபட்ச நடவடிக்கையையும் டிரைவர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்.
ஏலக்காய் தொழில் பாதிப்பு...
தீபாவளி சீசன் வந்துள்ள நிலையில் இந்த ஸ்டிரைக்கால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று அங்குள்ளவர்கள் அஞ்சுகிறார்கள்.
கோரிக்கை....
இந்த மார்க்கத்தில் கிட்டத்தட்ட 20,000 தொழிலாளர்கள் தினசரி கேரளாவுக்கு வேலைக்காக போகின்றனர். இவர்களுக்காக 1500 ஜீப்கள், வேன்கள் இயங்கி வருகின்றன. தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, இடுக்கி கலெக்டருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.