லோக்சபா தேர்தலைப் போலவே "தடை" விதித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் திட்டமா?
சென்னை: லோக்சபா தேர்தலின்போது தமிழகம் முழுக்க 144 தடையை விதித்து தேர்தலை நடத்தியது போல தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலிலும் அதேபோல தடையை அமல்படுத்தி தேர்தல் நடத்தலாமா என்று மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதை எந்தக் கட்சியாவது எதிர்த்தால் லோக்சபா தேர்தலை முன்னோடியாக காட்டி தடையை அமல்படுத்தவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அப்படி தடை விதிக்கப்பட்டால் எதிர்க்கட்சிகள் கூட்டாக சேர்ந்து அதை எதிர்க்கலாம், கோர்ட்டுக்குப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
18ம் தேதி இடைத் தேர்தல்
தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு வருகிற 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
பல இடங்களில் போட்டியின்றி அதிமுக வெற்றி
இதில் நெல்லை மேயர், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுகவினர் போட்டியின்றி வெற்றி பெற்று விட்டனர்.
கட்சி தாவிய பாஜகவினர்
பல இடங்களில் பாஜகவினர், அதிமுகவினருக்கு சாதகமாக வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். நெல்லையிலும், சென்னையிலும் பாஜகவினர் அதிரடியாக மனுக்களைத் திரும்பப் பெற்று அதிமுகவுக்கு உதவியுள்ளனர்.
கோர்ட்டை நாடவுள்ள பாஜக
இதனால் கோபமடைந்துள்ள பாஜக, அதிமுகவினர் மிரட்டலால்தான் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகியதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அறிவித்துள்ளது.
தடை வருகிறது
இந்த நிலையில் இடைத் தேர்தலை 144 தடை விதித்து நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அய்யர் தலைமையில் ஆலோசனை
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேட்டில், உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சோ. அய்யர் தலைமையில் நடந்தது. இதில் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., சத்தியமூர்த்தி, சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் நல்லசிவம், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
144 தடை குறித்து ஆலோசனையா?
இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, வாக்கு எண்ணிக்கை, வாக்குப் பதிவு, டாஸ்மாக் கடைகளை மூடுவது மற்றும் 144 தடை விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இருப்பினும் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை தெரியவில்லை.