ஓட்டு போட சொந்த ஊர் செல்ல அலைமோதிய பயணிகள் - கோயம்பேட்டில் மறியல்
சென்னை: தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் வாக்களிக்க அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பேருந்துகள் போதுமானதாக இல்லை என்று கூறி ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 232 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. ஜனநாயகக் கடமையாற்றுவதற்கான வெளியூரில் பணிபுரியும் பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
தலைநகர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தேர்தல் ஓட்டு போடுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர். இதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டத்தால் திருவிழா கோலமாக காணப்பட்டது.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான நேற்றும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் இயக்கப்படும் பேருந்துகள் போதுமானதாக இல்லை எனக் கூறி சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் தங்களின் உடைமைகளையும் பொருள்களையும் வைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரைந்து வந்து, சமாதானம் செய்தனர். இதனையடுத்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் அனைவரும் வாக்களிக்க சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.