பிப். 16ம் தேதி திட்டமிட்டபடி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக மின்வாரிய ஊழியர்கள் அறிவிப்பு
பிப்ரவரி 16ம் தேதி திட்டமிட்டபடி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக மின்வாரிய ஊழியர்கள் அறிவித்து உள்ளனர்.
சென்னை : 26 மாதங்களாக வழங்கவேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படாததால், மின்வாரிய ஊழியர்கள் பிப்ரவரி 16ம் தேதி திட்டமிட்டபடி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.
இதை கண்டித்து கடந்த மாதம் 23ம் தேதி அன்று சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பை வெளியிட்டன.
வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும் கடந்த மாதம் 22ம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்த கொண்டனர்.
அந்தப் பேச்சுவார்த்தையில் இந்த மாதம் 12ம் தேதிக்குள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மேற்கூறிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்தது.
இதனையடுத்து, வரும் வரும் 16ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய பத்து தொழிற் சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
அதன்படி, இன்று மீண்டும் அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி 16ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் அரசு காலம் தாழ்த்தினால் போராட்டம் தொடர்வது குறித்து பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.