அடடே.. ஜார்ஜ் கண்ணுக்கு இப்பத்தான் செய்தியாளர்கள் தெரிகிறார்களா!
தானாக முன்வந்து செய்தியாளர்களை ஜார்ஜ் சந்தித்துள்ளார்.
Recommended Video
சென்னை: செய்தியாளர்கள் இப்போதுதான் ஜார்ஜ் கண்ணுக்கு தெரிகிறார்களா?
எழுந்திருக்கவே முடியாத சிக்கலில் விழுந்துள்ள ஜார்ஜ்... தட்டுத்தடுமாறி சுதாரித்து வந்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதுவும் தானாக முன்வந்து பேசியுள்ளார்.
ஒரு காலத்தில் அசைக்கவே முடியாத சக்தி என்று கருதப்பட்டவர் கமிஷனர் ஜார்ஜ். பணி நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே இவர் மீது காரசார விமர்சனங்கள், புகார்கள், அதிருப்திகள்தான்!
ஆறுமுகசாமி கண்டனம்
இப்படித்தான் ஒரு விவகாரத்தில் ஜார்ஜ் சிக்கியபோது அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று எத்தனையோ தரப்பில் இருந்து அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வளவு ஏன், சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஆறுமுகசாமியே, ‘ஜார்ஜ் ஒன்றும் புனித ஜார்ஜ் கோட்டையின் இளவரசர் அல்ல... அவர் சென்னைக்கு மட்டும்தான் ஆணையர்" என்று சுடுசொற்களால் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
சர்வாதிகாரி ஜார்ஜ்
ஒருமுறை சட்டமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சௌந்தரராஜன் ‘கமிஷனர் ஜார்ஜ் ஒரு சர்வாதிகாரியைப் போலச் செயல்படுகிறார். பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதே இல்லை' என்று தொடங்கி மொத்தமாக அவர் மீதான புகாரை லிஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார்.
கண்டனம், எதிர்ப்பு
பொதுவாக, தமிழக அரசை பற்றி எதிர்க்கட்சிகள் குறை சொன்னால் உடனே மேஜையை தட்டி அமர்க்களம் செய்து எதிர்ப்பு குரல்களை எழுப்பி கூச்சல் போடுவது வழக்கம். ஆனால் எம்எல்ஏ சௌந்தரராஜன், ஜார்ஜ் பற்றி குறை சொன்னபோது ஒருத்தர்கூட அதற்கு ஆட்சேபமோ, கண்டனமோ, எதிர்ப்போ எதுவுமே சொல்லவில்லை. எல்லோருமே அமைதியாகத்தான் இருந்தார்கள். சபாநாயகர் உட்பட!!
ஜெ. காட்டம்
காரணம்.. ஜார்ஜின் அணுகுமுறை அப்படியானதாக இருந்தது. அனேகமாக கடுமையான சர்ச்சைக்கும் புகாருக்கும் உள்ளான கமிஷனர் ஜார்ஜ் ஆகத்தான் இருக்கும். அதேபோல ஜெயலலிதாவிடம் ஒரு கமிஷனர் மீது அதிக அளவு வந்த புகாரும் வந்ததும் ஜார்ஜ் பற்றிதான்.
குற்றச்சாட்டுதான்
ஜார்ஜ் பணியாற்றிய காலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது மிக மிக குறைவு. எப்போதுமே செய்தியாளர்களை அவர் மதிப்பது இல்லை. செய்தியாளர்களை சந்திப்பதே கிடையாது. செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றாலும் அங்கு ஜார்ஜ் இருக்க மாட்டார். நீங்கெல்லாம் ஒரு ஆளா என்பது போலத்தான் செய்தியாளர்களை அவர் நடத்தினார். இதுதான் அவர் மீது ஆரம்பத்திலிருந்தே வைக்கப்படும் குற்றச்சாட்டு.
டென்ஷன் ஜார்ஜ்
எல்லா பத்திரிகையாளர்களும் இந்த புகாரை பலமுறை தெரிவித்திருந்தார்கள். அவ்வளவு விறைப்பு... தனி தர்பார்... தனி ராஜ்யம்... என்று இருந்த ஜார்ஜ்தான் இப்போது தானாக செய்தியாளர்களை சந்திக்கும் நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் இப்பக் கூட பாருங்க, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லக் கூட முடியவில்லை ஜார்ஜால்.. இன்னும் உள்ளுக்குள் டென்ஷனாகத்தான் இருக்கார் போல!