கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு: 22-ந் தேதி காவிரி டெல்டாவில் "பந்த்" அறிவிப்பு!!
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா 2 அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோரை இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் பணியை உடன் தடுத்து நிறுத்திட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றைஉடன் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ந் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம், சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவது என அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோருவதற்காக விவசாய சங்கங்களின் தலைவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். சென்னை கோபாலபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் ஆதரவு கோரினர். அப்போது இப் போராட்டத்துக்கு திமுக முழுமையாக ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.
மேலும் புதிய கட்சி தொடங்கி உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து ஆதரவு கோரினர். இந்தப் போராட்டத்துக்கு தமது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும் வாசன் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கருணாநிதியுடன் வீரபாண்டியார் குடும்பம் சந்திப்பு
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினர் இன்று சந்தித்து பேசினர்.