டெல்லியில் தமிழக விவசாயிகள் மனித மாமிசம் சாப்பிட்டு போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் மனித மாமிசம் சாப்பிட்டு போராட்டம் நடைபெற்றது.
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்பு துண்டுகளுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து மனித மாமிசத்தை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நதிகளை இணைத்தல், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண் வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த ஜூலை 16ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தினமும் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணலில் புதைந்து போராட்டம், உருண்டு போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என தினமும் ஒரு நூதன போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
விவசாயிகள் கைது
திங்கட்கிழமையன்று பின்புறம் கோவணத்தை எடுத்துவிட்டு அரை கோவணத்துடன் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கோவணத்துடன் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான 31 விவசாயிகளை கைதுசெய்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு அவர்களை விடுவித்தனர்.
மனிதமாமிசம்
டெல்லியில் நேற்று கோவணத்துடன் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்பு துண்டுகளுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து மனித மாமிசத்தை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டு கொள்ளாத மோடி
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, , வறட்சி நிவாரணம், இன்சூரன்ஸ் தொகையை தரவில்லை. அழிந்த பயிர்களுக்கு நஷ்டஈடு தரவில்லை. விவசாயிகளை பார்க்க மறுக்கும் பிரதமர் மோடியை கண்டித்து மனித எலும்பு, மாமிசத்தை சாப்பிடும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
உணவுக்கு கூட வழியில்லை
பிரதமர் மோடி எங்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. தெருவில் உறங்கி போராட்டம் செய்து வருகிறோம். டெல்லியில் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு குருத்துவாராவில் சீக்கியர்கள் உணவு தருகிறார்கள்.
சாகும் போராட்டம்
பிரதமர் பார்க்க மறுத்தால் நாங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லப்போகிறோம். சாக அனுமதி தாருங்கள் என்று கூறி மனு அளித்து விட்டு கழுத்தை அறுத்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்தப்போகிறோம் என்றும் அய்யக்கண்ணு கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் டெல்லியில் படும் துயரம் மத்திய அரசின் செவிகளுக்கு எட்டாமல் போனதேனோ?