காணாமல் போன பருவமழை! நெல்லை, தூத்துக்குடியில் கானலான கார் பருவ நெல் சாகுபடி!
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் நெல்லை,தூத்துக்குடியில் கார் பருவ சாகுபடி கானல் நீராகிப் போயுள்ளது.
நெல்லை: தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்ததால் கார் பருவ நெல் சாகுபடி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் மூலமே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும்.
தண்ணீர் பிரச்னை
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும் பொய்த்துப் போன நிலையில் கடந்த 6 மாதங்களாக நெல்லை,
தூத்துக்குடியில் குடிநீர் தேவையே பெரும் பிரச்னையாக இருந்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே தினமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அறுவடை பாதிப்பு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடக்க காலத்தில் களை கட்டியது. பின்பு ஒரு வாரத்திற்கு பின்பு காணாமல் போனது. பருவமழை 45 நாட்களை கடந்துள்ள நிலையில் இனியும் தென்மேற்கு பருவமழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே மழை பெய்தாலும் அறுவடை காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என்பதால் அறுவடை பாதிக்கும்.
அணைகளின் நீர்மட்டம்
தற்போதைய நிலையில் அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.24 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 34.10 அடியாகவும் உள்ளது.
கிடைக்குமா தீர்வு
பாபநாசம் அணையில் இருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீரை வைத்து தான் அக்டோபர் வரை சாமாளிக்க வேண்டும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இதனால் பாபநாசம் அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.