தமிழத்தில் முதன் முறையாக சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்
சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கை ஜெயாவிற்கு இதற்கான பணி நியமான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் வசித்து வருபவர் திருநங்கை ஜெயப்பிரகாஷ் என்ற ஜெயா,23. இவருக்கு, கொளத்தூர் ஊராட்சி ஏர்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார்.
அப்போது அவர், திருநங்கை ஜெயாவுக்கு வாழ்த்து தெரிவித்து, மாணவர்களுக்கு தரமான உணவை சமைத்துக் கொடுப்பதோடு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர் அ.ஞானசேகரன் கூறும் போது, "சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட் டன. அதில், ஒரு திருநங்கையிடம் இருந்து மட்டும் விண்ணப்பம் பெற்று பரிசீலித்தோம். அதில் அவர் தகுதி பெற்றுள்ளதால், அவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடம் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தில் சத்துணவுத் துறையில் பணி நியமனம் பெறும் முதல் திருநங்கை ஜெயா. சமுதாயத்தில் உள்ளவர்கள் திருநங்கைகளை புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திருநங்கைகளுக்கு வீடு அல்லது மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
செய்தியாளரிடன் பேசிய ஜெயா, "என்னுடைய சொந்த ஊர் சிறுநாத்தூர். என் குடும்பத்தில் 3வது மகனாக பிறந்தேன். 9ம் வகுப்பு படிக்கும்போது, எனது உடலில் மாற்றம் ஏற்பட்டது. வீட்டில் பிரச்சினை அதிகமானது. ஆனாலும் கீழ் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றேன். இந்நிலையில், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தேன்.
வீட்டில் இருப்பவர்கள் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டனர் . என்னை புரிந்துகொண்ட மாணவர்கள், நன்றாக பழகினார்கள். ஒருசில மாணவர்கள் மட்டும் என்னை புறக்கணித்தனர். வீட்டிலும் என்னை புறக்கணித்ததால் மன வருத்தம் ஏற்பட்டது. இதனால் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஊரை விட்டு ஓடிப் போய் விட்டேன்.
சக திருநங்கை சகோதரிகள் ஜனனி, அம்மு ஆகியோருடன சேர்ந்து பக்கத்து ஊரான கொளத்தூர் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினேன்.
என்னுடைய சகோதரிகள் மூலமாக சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பம் தருவது தெரிய வந்தது. உடனடியாக விண்ணப்பித்தேன்.
இப்போது ஆட்சியர் ஐயா மூலமாக வேலை கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோசமாக உள்ளது, வேலை கிடைக்க முழு காரணமாக இருந்த சகோதரிகளுக்கு நன்றி. இவர்கள் இல்லையென்றால் நான் அரசு வேலையில் சேர்ந்திருக்க முடியாது. திருநங்கைகளில் பலர் படிக்காமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி அளவில் தேர்ச்சி பெற்றால் வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
சமீபத்தில் திருநங்கை பிரித்திகா யாசினி சமீபத்தில் சப். இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டார். தற்போது ஜெயா, சத்துணவு அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.