மீனை ஆசை தீர கடித்து சாப்பிட முடியாமல் செய்தால் என்ன நியாயம்?
மார்க்கெட் மீன்களில் கெமிக்கல் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை: சிக்கன், மட்டன் போன்றவற்றை சாப்பிடாதவர்கள் கூட மீனை ஒரு பிடி பார்த்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல.. சிக்கன், மட்டன்கள் என்றாலே ஒருசில வகைதான். ஆனால் மீனில்தான் எத்தனை எத்தனை வகைகள்.. ஆனால் மீனை சாப்பிட தெரிந்தவர்களில் எத்தனை பேருக்கு மீனின் தரம் அறிந்து வாங்க முடியும்?
கடலிலிருந்து மார்க்கெட் வந்து சேரும் இடைப்பட்ட நாட்களில் மீன்களின் நிலை என்ன என்று யாராவது எண்ணி பார்த்திருப்போமா? அப்படி தரம் அறிய ஒரு குழு புறப்பட்டபோது, சில பகீர் தகவல்கள் கிடைத்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. மீன்பிரியர்கள் மட்டுமல்ல.. பொதுமக்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது தலையாய கடமையாகும்.
30 மீன்களில் பரிசோதனை
கடலில் மீன்பிடிசாதங்களுடன் கடலுக்கு செல்லும் மீனவர்கள், 2, 3 நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரம் கழித்தோதான் தாங்கள் பிடித்த மீன்களை கொண்டு வந்து கரையில் கொட்டுவர். குறிப்பாக சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் மீன்களை வாங்க பல்லாயிரக்கணக்கான கூட்டம் படையெடுத்து செல்கின்றனர். இந்த பகுதிகளில் மீன்களின் தரம் குறித்து ஒரு ஆய்வு ஜுலை 4 மற்றும் 8-ம் தேதிகளில் திடீரென நடத்தப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆய்வினை நடத்த முன்வந்தது. ஆய்வுக்காக சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட மார்க்கெட்டுகளிலிருந்து கெளுத்தி, வௌவால், சுறா என 30 மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
புற்றுநோய் பாதிப்பு
30 வகை மீனில் 11 வகையான மீன்களுக்கு ஃபார்மலின் என்ற வேதிப்பொருள் செலுத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஏனெனில் இதற்கு முன்பும், தமிழ்நாடு ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு லாரிகளில் வந்த மீன்களை உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கு உட்படுத்தியபோதும், இதே ஃபார்மலின்தான் மீன்களுக்குள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றினை பறிமுதலும் செய்தனர். இப்போது, சென்னையில் உள்ள மீன்களிலும் இந்த கெமிக்கல் இருந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், இந்த ஃபார்மலின் கலந்த மீனை சாப்பிட்டால் புற்றுநோய் உள்ளிட்ட நிறைய நோய்கள் நம்மை தாக்கும் என்பதால்தான்.
இடைத்தரகர்கள் வேலைதான்
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்கும்போது, "சாதாரணமாக எல்லா மீன்களிலும் இந்த கெமிக்கல் பயன்படுத்தப்படுவதில்லை. தொலைதூரத்திற்கு அனுப்பப்படும் மீன்கள், கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவே இது மீன்களில் செலுத்தப்படுகிறது. மீன்களில் இதுபோன்று கெமிக்கல் கலந்திருப்பதாக தகவல் பரவியதையடுத்து கேரளாவில் நமது மீன்களை வாங்க தயக்கம் காட்டுவதாக கூட செய்திகள் வருகின்றன. கடலில் இறங்கி மீன்களை அள்ளி வந்து கரையில் கொட்டி அங்கேயே மீன்வியாபாரிகளுக்கு விற்றுவிடுவதோடு சரி, அதற்கு பிறகு இடைத்தரகர்கள் போன்றோர்கள்தான் இதுமாதிரி வேலையெல்லாம் செய்வார்கள் என்று தெரிவிக்கின்றனர் அப்பாவி மீனவர்கள்.
வீழ்ச்சியடையுமா மீன்விலை?
மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மோலின் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்றால், மீன்களை ஃப்ரெஷ்ஷாக பிடித்ததை போல் காட்டிக் கொள்ள கூட கெமிக்கல் ஒன்று உள்ளதாம். அதற்கு பெயர் சோடியம் பென்சோனேட் என்பதாம். இதனை மீன்களுக்குள் செலுத்திவிட்டால், அப்போதுதான் பிடித்த மீன் போல தெரியுமாம். இன்னும் எளிமையாக சொன்னால் ஐஸ் உருகுவதை இது தடுத்துவிடுமாம். ஆனால் கருவாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், மீன்களில் பயன்படுத்துவதில்லை என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தாலும் அதுவும் தவறுதானே? அதிகாரிகள் நடத்திய சோதனை, மற்றும் ஆய்வு முடிவுகள் இதெல்லாம் பார்த்தபிறகு மீன்பிடி துறைமுக பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதில் மீன்விலையும் வீழ்ச்சியடையுமோ என்று ஒரு பக்கம் கவலையும் கூடுகிறது.
கலப்படம்-கிரிமினல் குற்றமே
மனித குலம் சாப்பிடும் எந்த பொருட்களில் கலப்படம் செய்தாலும் அது கிரிமினல் குற்றம் அல்லவா? மனிதாபிமானற்ற செயல் அல்லவா? லாபநோக்கத்திற்காக ஒருசில மீன் தரகர்கள் செய்யும் இதுபோன்ற அபாயகரமான செயலால் பாதிக்கப்படுவது அப்பாவி மீனவர்களும், ஆசை ஆசையாக ரசித்து உண்ணும் பொதுமக்களும்தானே? விஷயம் அறிந்தவர்கள், படித்தவர்களும் இதை ஓரளவு அறிந்து விழித்து கொண்டாலும், பாமர, வெகுஜன மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு கூறு மீன் இவ்வளவு என்று சாலையோரத்தில் குவியலாக வைத்திருக்கும் மீன்களையோ, எப்போது பிடித்த மீன் என்று கூட தெரியாமல் தெருக்களில் சைக்கிளில் கூடையில் வைத்து கூவி வந்து விற்கும் மீன்களையோ வாங்கி சாப்பிடுவோர் லட்சக்கணக்கில் உள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக இது குறித்து தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து இந்த அபாயத்திலிருந்தும், பீதியிலிருந்தும் விரைவில் நடவடிக்கை எடுத்து தெளிவு கொடுக்கும் என நம்புவோம்.