கத்தார் நாட்டு கடற்படை சுட்டதில் தமிழக மீனவர் பலி! மூவர் கைது!!
ராமநாதபுரம்: பக்ரைன் நாட்டில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களில் ஒருவர் கத்தார் நாட்டு கடற்படை சுட்டதில் உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இதே ஊரைச் சேர்ந்த சமயமுத்து, தொண்டி அருகே தாமோதிரபட்டினத்தை சேர்ந்த ராசு, அய்யப்பன் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் பக்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி பக்ரைன் நாட்டில் இருந்து வழக்கம் போல் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றபோது காற்றின் திசைவேகத்தில் படகு கத்தார் நாட்டு கடல் எல்லைக்கு சென்று விட்டது.
ஆனால் கத்தார் கடற்படையினர் தமிழக மீனவர்கள் இருந்த படகை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார். படகில் இருந்த சமயமுத்து, ராசு, அய்யப்பன் ஆகியோரை கத்தார் ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
இறந்த கார்த்திகேயனுக்கு எழுவக்காள் என்ற மனைவியும், ஹரீஸ்மா, திருமுருகன், பாலமுருகன், ஆகிய குழந்தைகளும் உள்ளனர். இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த திருப்பாலைக்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.