ஆப்பிரிக்காவில் அமோகமாக விற்பனையாகும் தமிழக 'அம்மா' இலவச ஸ்கூல் பேக்குகள்?
சென்னை: தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் இப்போது கண்டம் விட்டு கண்டம் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அம்மா இலவச ஸ்கூல் பேக்குகளை ஆப்பிரிக்கர்கள் சுமந்து செல்லும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா பொருட்கள் அண்டை மாநிலங்களில் விற்கப்படுவதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்காக வழங்கப்பட்ட விலையில்லா ஸ்கூல் பேக்குகள் ஆப்ரிக்காவில் விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
ஆப்பிரிக்காவில் இந்திய மதிப்பில் ரூ.100 முதல் ரூ150 வரை இந்த பைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த இலவச பொருட்கள் ஆப்பிரிக்காவுக்கு போனது எப்படி என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
ஏற்கனவே அரிசி, சர்க்கரை என ரேசன் பொருட்கள் கடத்தல் ஓய்ந்தபாடில்லை. தற்போது இலவச விலை பொருட்களையும் கடத்தி நாடுவிட்டு நாடு விற்பனை செய்யும் கருப்பு ஆடுகளை பிடிப்பது எப்போது?