மே 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
காவிரி வழக்கில் மே 16ல் தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சேலம் : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், மே 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இருந்து தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி சிங் காவிரி நதி நீர் பங்கீட்டிற்கான திட்ட வரைவு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
மேலும், காவிரி வாரியம் அல்லது குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதை ஏற்கத்தயார் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தமிழக மற்றும் கர்நாடக வழக்கறிஞர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதில் அளிக்க நான்கு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, மே 16ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலத்தில் இருந்து திருப்பதி செல்வதற்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், மே 16ம் தேதி காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும், காவிரி வாரியமும், நதி நீர் பங்கீட்டு அமைப்பும் அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.