தமிழகத்தில் 11 மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள்
சென்னை: தமிழகத்தில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாட்டின் அனைத்து பகுதியில் உள்ளவர்களுக்கும் பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் துறை ஆகியவை இணைந்து, தலைமை தபால் நிலையங்கள் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை தொடங்கி வருகின்றன.
அதன்படி முதல் கட்டமாக நாடு முழுவதும் 86 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதில் 52 தபால் நிலையங்களில் இந்த வசதி ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மீதம் உள்ள 34 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.