குளச்சல் துறைமுகத்துக்கு மார்ச் 8-க்குள் மோடி, ஜெ. அடிக்கல் நாட்டுவர்.... நிதின் கட்காரி தகவல்
கன்னியாகுமரி: தமிழகத்தின் குளச்சல் துறைமுகத்துக்கு மார்ச் 8-ந் தேதிக்குள் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்துநிலையம் அருகே 4 வழிச் சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு தமிழக, கேரள எல்லைப் பகுதியான காரோடு முதல் வில்லுக்குறி, வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி, நாகர்கோவில் முதல் காவல்கிணறு, அவினாசி - திருப்பூர் - அவினாசிபாளையம் ஆகிய 4 நான்குவழிச் சாலைத் திட்டங்கள், மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலத் திட்டங்கள் என, ரூ. 2,766 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது நிதின் கட்காரி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.5% -ல் இருந்து 7% ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 39 திட்டங்களுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக 9 திட்டங்கள் அறிவிக்கப்படும். நாட்டில் 250 ரயில்வே மேம்பாலங்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஏற்கெனவே 11 ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.
காரைக்குடி - தஞ்சாவூர், பெரம்பலூர் - ஆத்தூர், திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி, வள்ளியூர் - திருச்செந்தூர் உள்பட 9 தமிழக சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ. 7 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் இதுவரை ரூ. 33 ஆயிரம் கோடிக்கான திட்டம் கொடுத்துள்ளோம். மேலும் ரூ. 17 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்வு செய்து அறிவிக்கலாம் என உரிமையும் வழங்கியுள்ளேன்.
தமிழகத்தில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கப்பல் போக்குவரத்து தொடங்க ஆய்வு செய்து நிறைவேற்றுவோம்.
பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் குளச்சல் துறைமுகத்துக்கு மார்ச் 8-ந் தேதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு நிதின்கட்காரி கூறினார்.