அப்பாடா.. சுட்டெரித்த கத்திரி வெயிலுக்கு நாளையுடன் 'மங்களம்'!
சென்னை: தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நாளையுடன் விடை பெறுகிறது.
அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4 ம்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் மழையுடன் தான் தொடங்கியது. ஆனால் அதற்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. பெரும்பாலான நகரங்களில் வெயிலின் அளவு 108 டிகிரியை தொட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் இந்த ஆண்டின் அதிகபட்சமாக கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதுகடந்த 10 ஆண்டுகளில் அடித்த அதிகபட்ச வெயில் அளவுகளில் ஒன்று. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதையே தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
தமிழக மக்களை கடந்த 24 நாட்கள் வாட்டி வதைத்த அக்னிநட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) விடை பெறுகிறது. இனிவரும் நாட்களில் படிப்படியாக வெயிலின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழையும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே பருவமழை தொடங்கும் போது, தமிழகத்தில் வெயிலின் அளவு வெகுவாக குறையவாய்ப்பு இருக்கிறது.
சென்னையை அடுத்த மாதவரம் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கத்திரிவெயிலின் கொடுமை தாங்காமல் அவர் மயங்கி விழுந்து இறந்தார்.