நியாயமான கோரிக்கைக்காக போராடுபவர்களை அராஜகமாக கைது செய்வதா? அன்புமணி கண்டனம்
நியாயமான கோரிக்கைக்காக போராடுபவர்களை அராஜகமான முறையில் கைது செய்வதா என்று அன்புமணி கேள்வியெழுப்பி உள்ளார்.
Recommended Video
சென்னை : நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து போராடும் அரசு ஊழியர்களை அராஜகமான முறையில் கைது செய்திருப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், நாளை கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்க நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக நடந்த இந்த கைது நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. அரசு ஊழியர்களிடம் நியாயமும், நேர்மையும் இருப்பதால் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்துகின்றனர்.
அரசிடமும் அதே நேர்மையும், நியாயமும் இருந்திருந்தால் அவர்களுடன் பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நேர்மையும், நியாயமும் இல்லாததால் தான் அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு மட்டுமின்றி, அவர்களின் போராட்டம் தேவையற்றது என்று கூறுவதற்கு தமிழக அரசுக்கு எந்த தகுதியும், உரிமையும் இல்லை. தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை.
இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே, வீணாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.