தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் திடீர் விலகல்?
தமிழக அரசு ஆலோசகராக பொறுப்பு வகித்து வந்த ஷீலா பாலகிருஷ்ணன் அப்பொறுப்பில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 31 வரை பதவிக் காலம் உள்ள நிலையில் முன்கூட்டியே விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷீலா பாலகிருஷ்ணன். கடந்த 1976ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் 41வது தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அவர் பணி ஓய்வு பெற்றார். தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை ஷீலா பாலகிருஷ்ணன் நன்கு அறிந்தவர் என்பதால் அவருக்கு தமிழக அரசின் ஆலோசகர் பதவியை அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தமிழக அரசின் முக்கிய அலுவல்களை இவரே கவனித்து வந்தார். மேலும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அவர் முக்கிய ஆலோசனை வழங்கி வந்தார். .
இந்தநிலையில் அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷீலா பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் இந்தாண்டு மார்ச் 31ந் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெங்கட்ராமன், முதல்வரின் தனிச்செயலாளர் ராமலிங்கம் ஆகிய இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ள பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.