சபாநாயகர் தனபாலுடன் அரசுத் தலைமை வழக்கறிஞர் திடீர் சந்திப்பு
சபாநாயகர் தனபாலுடன் அரசு தலைமை வழக்கறிஞர் தலைமை செயலகத்தில் திடீர் சந்திப்பை நடத்தியுள்ளார்.
சென்னை : தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன. சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிகிறது.
மற்றொரு புறம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதே போன்று திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையும் முடிவடைய உள்ளது.
இந்த இரண்டு வழக்குகள் ஹைகோர்ட்டில் இந்த வாரத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அரசின் நிலைப்பாடு என்ன, அடுத்தகட்டமாக இந்த வழக்கை எப்படி எடுத்து செல்வது உள்ளிட்ட விவகாரங்களை தலைமை வழக்கறிஞர் சபாநாயகரிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.