ஆவின் பால் தட்டுப்பாடா? உடனே இந்த நம்பர்ல கூப்பிடுங்க
சென்னை: சென்னை-புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பாலுக்கு நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொது மக்கள்-குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆவின் பால் தங்குதடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக, சென்னை மாநகரம்-புறநகரப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், 98403 87510, 98409 07494, 94439 44908 ஆகிய செல்போன்எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக, அம்பத்தூர், சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து எடுத்துச் செல்லும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மூழ்கிய பால் பண்ணைகள்
ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி தடைபட்டதால், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் கிடைக்கவில்லை. பால் பாக்கெட்டுகளுக்காக அதிகாலையில் இருந்து பொது மக்கள் பலமணி நேரம் காத்திருந்தும் அவை கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
அரை லிட்டர் ரூ. 100
வட பழனி, சூளைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த அளவிலேயே பால் பாக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. அவற்றை சில முகவர்கள் மொத்தமாகப் பெற்றுக் கொண்டு அரை லிட்டர் பாக்கெட்டை சுமார் ரூ.100 வரை விற்றனர்.
தனியார் பாலுக்கும் சிக்கல்
தனியார் பால் பாக்கெட்டுகள் குறைந்த அளவே சப்ளை செய்யப்பட்டன. பல கடைகளில் பால் பாக்கெட்டுகளைப் பெறுவதில் அடி-தடி சண்டைகள் ஏற்பட்டன. தனியார் பால் பாக்கெட்டுகளும் லிட்டருக்கு ரூ.20 வரை கூடுதலாக விற்கப்பட்டன. பால் கிடைத்தால் போதும் என்பதால் பொது மக்கள் கூடுதல் விலைக்கு வாங்கிச் சென்றனர்.
முகவர்கள் பதுக்கல்
ஒரு சில இடங்களில் அரைலிட்டர் பாலை ரூ.100 கொடுத்து வாங்கிச் சென்றனர். பால் பாக்கெட்டுகளை முகவர்கள் மொத்தமாக வாங்கிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு வீட்டுக்கு ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரையில், ரேஷன் அடிப்படையில் பால் விநியோகிக்க வேண்டும் என்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு அறிவிப்பு
இதனிடையே, ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஆவின் பால் தங்குதடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக, சென்னை மாநகரம்-புறநகரப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், 98403 87510, 98409 07494 94439 44908 ஆகிய செல்லிடப் பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.