பா. வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது... தமிழக அரசு அறிவிப்பு!
2017ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2017ம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது, இதில் 2017ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் 8 தமிழறிஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொடர்ந்து செயலாற்றிய தமிழறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதே போன்று 2017ம் ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியலை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதில் 2018ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் கோ. பெரியண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது டாக்டர் சகோ. ஜார்ஜ். கே ஜேக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா, காமரைஜர் விருதுகள் அறிவிப்பு
இதே போன்று அறிஞர் அண்ணா விருது அ. சுப்ரமணியனுக்கும், காமராஜர் விருது தா.ரா. தினகரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது முனைவர் பாலசுப்ரமணியனுக்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது முனைவர் மருத நாயகத்திற்கும் வழங்கப்படுகிறது.
பாலகுமாரனுக்கு திருவிக விருது
பாவேந்தர் பாரதிதாசன் விருது ஜீவபாரதிக்கும், திருவிக விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விருதுகள் 9 தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வளர்மதிக்கு பெரியார் விருது
இந்த விருதுப் பட்டியலில் சிறப்பான அம்சம் என்னவென்றால் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ள பெரியார் விருது தான் அது. 2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
50 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை
விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனவரி 16ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, 1 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் தந்து சிறப்பிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் 50 பேர் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.2,500 உதவித் தொகையும் மருத்துவப்படியாக ரூ. 100 பெறுவதற்கான அரசாணைகள் வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.