பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு- ஜெ. அறிவிப்பு!!
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து
மாரியப்பனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரை உலகத்தினரும் மாரியப்பனின் சரித்திர சாதனைக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
கார் கிடைக்குமா?
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மாரியப்பனுக்கு ரூ50,000 பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு கார் பரிசு அளித்தது போல மாரியப்பனுக்கும் கிடைக்குமா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழக அரசு வாழ்த்து
தற்போது தமிழக அரசும் மாரியப்பன் தங்கவேலுக்கு பரிசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் மாரியன் என பாராட்டியுள்ளார்.
ரூ2 கோடி பரிசும் நன்றியும்
மேலும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தம்முடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசுத் தொகையை அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரியப்பனின் தாயார் சரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.