ரூ. 2 கோடியில் தஞ்சையில் தமிழ் மொழி விரிவாக்க மையம்... பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை : சர்வதேச அளவில் தமிழ் மொழி வளர்க்கப்படும் விதமாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2018-19ல் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்ததாவது : ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவிட ரூ. 10 கோடியை தமிழக அரசு அளித்துள்ளது. சர்வதேச அளவில் தமிழ் மொழி வளர்க்கப்படும் விதமாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதற்கென ஆண்டு மானியமாக ரூ. 2 கோடியை அரசு வழங்கும்.
இதே போன்று ஆண்டு மானியமாக ரூ. 1 கோடியை தமிழ் பண்பாடு மையம் ஒன்றும் உருவாக்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கான நிதி உதவி ரூ. 1,500ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2018-19ம் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ. 52.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலம் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இந்த ஆண்டை தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக அதிமுக அரசு கொண்டாடி வருகிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.