எந்த வகுப்புக்கு எந்தெந்த ஆண்டு பாடத்திட்டம் மாறுகிறது?...அரசு விளக்கம்!
அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை: 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் மாற்றப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்திலுள்ள மாணவர்கள் திறமையானவரகளாக இருந்தாலும் அவர்களின் பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு உயர்கல்வியான மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இதே போன்ற அடுத்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது " ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் 7 ஆண்டுகளாகவும், பனிரெண்டு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளாகவும் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதாக" தெரிவித்தார்.
பிளஸ் 1க்கு அடுத்த ஆண்டு
இதனால் அடுத்த கல்வியாண்டான 2018 - 2019ல் 1,6,9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்திற்கு இணையான தரத்துடன் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல்முறையாக பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதைய பாடத்திட்டத்தை பயின்று அதன்படி தேர்வு எழுதுவார்கள் என்று கூறினார்.
2019ல் பனிரெண்டாம் வகுப்பு புக்
இதனைத் தொடர்ந்து 2019- 2020 கல்வியாண்டில் 2,7, 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான வரைவுப் பாடத்திட்டங்கள் உயர்மட்டக்குழு, மாணவர்களின் மன நிலைக்கு ஏற்ப கல்வித்திட்டத்தை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பாடத்திட்டங்களுக்கு மாற்றம் கொண்டு வரும் போது அதற்கேற்ப ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அமைச்சர்
உயர்தர கல்வி
எஞ்சிய வகுப்புகளான 3,4,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 2020ல் மாற்றம் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும் அண்டை மாநிலங்கள் மற்றும், துணைவேந்தர்கள், கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்டு பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றார்.
பல வண்ணங்களில் புக்
புதிய பாடத்திட்டத்தில் தமிழர் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் உள்ளடக்கியே பாடப்புத்தகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாடப்புத்தகங்கள் பல வண்ணங்களில் இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கருப்பு வண்ணத்தில் புத்தகம் அச்சிடப்படும் என்றார்.
எப்போ ஸ்கூல்?
கோடை விடுமறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்பதை 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார். மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விவரத்தை சேகரிக்கும் பதிவுத் தாள்கள் அனைத்தும் இனி டிசியாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.