மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தமிழக அரசு முடிவு
காவிரி விவகாரத்தில் மாலை 5 மணி வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: காவிரி விவகாரத்தில் மாலை 5 மணியுடன் கெடு முடிவடைந்த நிலையில் வரும் சனிக்கிழமை மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் காவிரி நீர் பகிர்வை ஒழுங்குமுறைப்படுத்த திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எனினும் மாலை 5 மணி வரை காத்திருக்க அந்த கூட்டத்தில் முடிவு செய்தனர். அந்த காலக்கெடு முடிவடைந்துவிட்டது. இதனால் அடுத்த கட்டமாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.