தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்- நிர்வாகம் முடங்கும்!
தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் நடத்தவுள்ளனர்.
கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் நடத்தினர். இந்த ஆண்டு நாளை முதல் போராட்டம் நடத்த உள்ளனர்.
வரையறுக்கப்படாத ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நிர்யணம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துவதாக அரசு ஊழியர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தலைவர் சுப்ரமணியன், மே 2முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்து வோம் என்றார். எங்களின் போராட்டத்தில் வருவாய், வேளாண்மை உட்பட 64 துறைகளைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு போராட்டம் நடைபெற்றது. சட்டசபையில் 11 அறிவிப்புகளை அப்போதய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.
20 சதவிகித இடைக்கால நிவாரணம் கேட்கிறோம் என்று கூறிய அவர், போராட்டம் பற்றி முதல்வர், நிதித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரிடம் நோட்டீஸ் அளித்தும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை என்றார். உள்ளாட்சித்துறை பணிகள், குடிநீர் பணிகள், வருவாய் துறை பணிகள் முடங்கும்
கிராம ஊராட்சிகள் தடைபடும் வணிகவரித்துறையில் இழப்பு ஏற்படும் என்றார்.
அரசு நிர்வாகம் நடைபெறுகிறது. நிதியில்லை என்று எந்த பணியும் நிற்கவில்லை கட்சிப் பிரச்சினை வேறு, அரசு பிரச்சினை வேறு. அன்றாட பணிகள் நடந்து வருகின்றன. அரசியல் சூழ்நிலைக்கும் எங்களின் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர் கூறினார்.
இதனிடையே 34 ஆண்டு காலமாக காத்திருந்த சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திட வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டு மொத்தத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சத்துணவு ஊழியர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது.