கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்... மகனின் கல்விச் செலவே அரசே ஏற்கும்... முதல்வர்
மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: எர்ணாகுளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியையும் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்விச் செலவை அரசே ஏற்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்து கொண்டு எர்ணாகுளத்துக்கு வந்திருந்தார். நேற்றைய தினம் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை மகனை தேர்வு மையத்துக்கு அனுப்பிவிட்டு விடுதிக்கு சென்ற கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது உடல் எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை பெற தமிழகத்தில் இருந்து துணை வட்டாட்சியர் கொண்ட குழு எர்ணாகுளத்துக்கு விரைந்துள்ளனர். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும், கேரள அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்தார். மேலும் மகனுக்கு ஆறுதல் கூற தைரியமாக இருக்குமாறும் அறிவுறுத்தினார். அப்போது தன் மகனின் கல்வி செலவுக்கு உதவுமாறு பாரதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார்.
தமிழக பாஜகவும் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் படிப்புச் செலவுக்கு உதவும் என்று தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர் கிராமத்தில் இருந்து நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் என்பவரது தந்தை கிருஷ்ணசாமி என்பவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.