உரிய நேரத்தில் அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதே மக்கள் போராட்டத்திற்கு காரணம்: கனிமொழி
உரிய நேரத்தில் அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதே மக்கள் போராட்டத்திற்கு காரணம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின் போது, உரிய நேரத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாததே போராட்டத்திற்குக் காரணம் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரசு நியாயப்படுத்தப் பார்க்கிறது. அநியாயமாக 13 பேரின் உயிர் அரசின் அலட்சியத்தால் போயுள்ளது.
உரிய நேரத்தில் அரசு போராட்டக்காரர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால், மக்கள் போராட்டம் இத்தனை தீவிரமடைந்து இருக்காது. இனியாவது ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.