விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க அனுமதி: சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜெ. உத்தரவு
சென்னை: கெய்ல் வழக்கில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கெய்ல் நிறுவன வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். சீராய்வு மனுவில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்காக திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் விளைநிலங்கள் வழியாக குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தலாம் என்று இரு தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்ட விவசாயிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எதிர்கட்சித்தலைவர்களும் சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கெயில் வழக்கு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கெயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம் சார்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அவர் உத்தரவிட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.