பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவிற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் உத்தரவை மீறி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து இன்னும் 2 நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு, நாளை அல்லது வியாழக்கிழமை கேரளாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது என்று முதல்வர் ஓபிஎஸ் பதில் அளித்தார்.
பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ள நிலையில், முதல் தடுப்பணைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும் ஓபிஎஸ் சட்டசபையில் தெரிவித்தார்.
தடுப்பணை கட்டுவதை தடுக்கக் கோரி பிரதமருக்கு ஏற்கனவே தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மத்திய அரசு கொடுத்த அனுமதிக்கும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதன் அடிப்படையில், 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய நீர்வள அமைச்சக ஆணையை மீறி வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளதால், பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான எந்த பணியையும் செய்யக் கூடாது என 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு கேரளாவிற்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
என்றாலும், கேரள அரசு அணை கட்டுவதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருவதால், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.