"அம்மா"வைத் தூக்கிப் போட்ட அதிமுக அரசு.. பச்சையை கை விட்டது.. காவிக்குத் தாவியது!
தமிழக அரசில் இரட்டை இலை சின்னமான பச்சை நிறமே அனைத்திலும் இருந்த நிலையில் தற்போது அனைத்து காவி மயத்திற்கு மாறி வருவது அதிமுகவினர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா ஆட்சியில் அனைத்தும் பச்சை நிறத்திற்கு மாறிய நிலையில் தற்போது அரசின் சாயம் வெளுக்கும் வகையில் பச்சை நிற அடையாளங்கள் காவி நிறத்திற்கு மாறி வருவதாக அதிமுகவினர் ஆதங்கத்தில் உள்ளனர்.
தமிழக அரசியலில் யார் பதவிக்கு வந்தாலும், அவர்கள் நடத்தும் அரசு விழாக்களின் நிறங்கள் கண்ணில் பதிந்துவிடும். அ.தி.மு.க அரசின் சார்பில் விழா நடக்கிறது என்றாலே பச்சை வண்ணத்தில் மின்னத் தொடங்கிவிடும். தேர்தல் பரப்புரையாக இருந்தாலும் மிகப் பெரிய விழாவுக்கான அடிக்கல் நாட்டு விழாவாக இருந்தாலும் பச்சை வண்ணத்தை பறக்கவிடுவது அதிகாரிகள் வழக்கம். இதில் சிறிது மாறுபாடு ஏற்பட்டுவிட்டாலும், போயஸ் கார்டனில் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும்.
ஜெயலலிதா கடைசியாக திறந்து வைத்த மெட்ரோ ரயில் தொடக்க விழா வரையில் பச்சை வண்ணமே நீடித்தது. அம்மா உணவகம், பசுமை காய்கனி கடைகள் என அரசு திட்டங்கள் அனைத்தும் பச்சை வண்ண சாயத்தையே பூசிக் கொண்டன. அதுவே, ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க வந்துவிட்டால், பச்சை வண்ணத்தை அழித்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இதுநாள் வரையில் பச்சை வண்ணத்தை அரசு விழாக்களில் இடம் பெறச் செய்து வந்தனர்.
நடப்பது ஜெ. ஆட்சியில்லை
இந்நிலையில், டெங்கு ஒழிப்பு தினத்துக்காக தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பு போஸ்டர்கள் அனைத்தும் காவி நிறத்தில் அமைந்திருந்ததை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " ஜெயலலிதாவுக்குப் பிறகு, இது அம்மா வழியில் செயல்படும் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் நிலைமை அப்படியில்லை."
காவி நிறத்திற்கு மாற்றம்
"மாநில அரசில் எந்த முடிவெடுத்தாலும் டெல்லியின் ஒப்புதலோடுதான் செய்கிறார்கள். பா.ஜ.க அரசிடம் முழுமையாக சரணடைந்துவிட்டார்கள். கரூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரையில், பச்சை வண்ணத்திலேயே அரசு விழாக்கள் நடந்து வந்தன. இப்போது புதிதாக காவி நிறத்தைப் பூசத் தொடங்கிவிட்டார்கள்."
விசுவாசத்தை காட்டுகிறார்களா?
நாளை நடக்க இருக்கும் புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கான என்ட்ரி பாஸ்களும் காவி நிறத்திலேயே உள்ளன. புதிய ஆளுநர் வருகைக்கும் நிற மாற்றத்துக்கும் தொடர்புள்ளதாக எனவும் கட்சி நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். மதுரையில் நடக்க இருக்கும் ஆர்.எஸ்.எஸ் விழாவை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைக்கிறார் என்று அடுக்கடுக்கான நிகழ்வுகளை அடுக்குகிறார்.
அரசு விழாவில் இனி காவிதானா?
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும்போது, ' புதிய ஆளுநர் வரும்போது மழை பெய்வதை நல்ல சகுனமாகப் பார்க்கிறேன்' என்றெல்லாம் பேசுகிறார். பா.ஜ.க நிர்வாகிகளே வெட்கப்படும் அளவுக்கு, மாநில அரசில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள். இனி அரசு விழாக்களில் காவி மட்டும்தான் இடம் பெறுமா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்" என்றார் வேதனையோடு.