மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்.. தடையில்லா சான்று வழங்கியது தமிழக அரசு
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சென்னை: மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடை இல்லா சான்று வழங்கியுள்ளது தமிழக அரசு.
மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு ரூ1,816 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடயே 2011- ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. 19 கிமீ தூரமுடைய இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது
இந்த திட்டம் கூவம் ஆற்றின் போக்கை கெடுப்பதாக கூறி, ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அத்திட்டத்திற்கு அனுமதி மறுத்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க உடன்பட்டார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக திட்டம் தொடங்கவில்லை.
இதையடுத்து பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விரைவாக செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மதுரவாயல்-துறைமுகம் இடையே 1530 கோடியில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. 6 ஆண்டாக கிடப்பில் இருந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.