உடல்களை உறவினர்களிடம் தர முடியாது.. தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்தது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்த வழக்கில் அதன் கோரிக்கையை ஏற்ற மறுத்தது நீதிமன்றம்.
தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் அவர்களது உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்தது.
தலை, நெஞ்சை குறிவைத்து சுட்டதாகவும், தனியார் மருத்துவர்களை கொண்டு உடற்கூறு நடத்தவும் வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், ரவீந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் துப்பாக்கிச் சூட்டில் சர்ச்சை நிலவுவதால் 13 பேரின் உடல்களை பதப்படுத்த வேண்டும்.
உடற்கூறு ஆய்வு செய்தாலும் சரி செய்யாவிட்டாலு்ம சரி உடல்களை பதப்படுத்த வேண்டும். நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கின. இதனிடையே சென்னை ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
அந்த மனுவில் தமிழக அரசு கூறுகையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்பதால் நாங்கள் என்ன செய்வது - என்று தமிழக அரசு கேள்வி எழுப்பியது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் தமிழக அரசு கேட்டது. அதன்படி இன்று மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு ஏன் அக்கறை. உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க முடியாது என்றனர்.
இதையடுத்து உடல்களை கேட்டு உறவினர்கள் அனுப்பிய கடிதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது அந்த கடிதம் அவர்களை மிரட்டி வாங்கப்பட்டது என்று மனுதாரர்களான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதுவரை 2 பேருக்கு மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.