டாஸ்மாக் ஊழியர்களுக்கு "சியர்ஸ்" செய்தி.. சம்பளத்தை உயர்த்தியது தமிழக அரசு!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தற்போது வாங்கும் ஊதியத்துடன் ரூ.2000 வரை உயர்த்தி வழங்கப்படும் என்றும் இனி ஊக்கத்தொகை வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் கண்காணிப்பாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் உள்ளிட்ட நிலைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஊழியர்கள் பணியிழந்துள்ளனர். மேலும் புதிதாக கடை வைக்கவும் தமிழகத்தில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கண்காணிப்பாளருக்கு மாத ஊதியம் ரூ.7,500-லிருந்து ரூ.9,000-மும், விற்பனையாளருக்கு ரூ.5,600-லிருந்து ரூ.7,500-மும், உதவி விற்பனையாளருக்கு ரூ. 4,200-லிருந்து ரூ.6,500-மும் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வானது வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை இனி வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.