தென்மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணிப்பதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
தென்மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்து தமிழக நலன்களுக்கு அரசு துரோகம் இழைத்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதன் மூலம் தமிழக நலன்களுக்கு பெருந்துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2020ம் ஆண்டோடு முடிவடைவதை அடுத்து, மத்திய அரசு 15வது நிதி ஆணையக் குழுவை சில மாதங்களுக்கு முன் அமைத்தது. அதன்படி, அந்தக் குழு கொடுத்துள்ள பரிந்துரைகள் 2020ல் இருந்து 2025ம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15வது நிதி ஆணையக்குழுவின் பரிந்துரைகளின் வரிப் பகிர்வு திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாடு இன்று கேரளாவில் நடைபெறுகிறது. இதை தமிழ்நாடு புறக்கணித்து இருப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்மாநில நிதி அமைச்சர்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வரி வருவாயை மாநில அரசுகளுக்கு பகிர்ந்து வழங்குவதில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து விவாதிப்பதற்காக கேரளத்தில் நடைபெறும் தென்மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பது தமிழக நலன்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.
அதிகார வரம்புகள் மாற்றம்
மத்திய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கான 15வது நிதி ஆணையத்தின் அதிகார வரம்புகள் மாநிலங்களுக்கு எதிராக உள்ளன. 1976ம் ஆண்டில் முதல் நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து 14வது நிதி ஆணையம் வரை 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்ந்து வழங்கப்பட்டது.
ஆனால், 15வது நிதி ஆணையத்தில் 2011ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப்பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி குறையும்
1971ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்கள் தொகை சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அவற்றுக்கான மத்திய அரசின் நிதி உதவி மிகவும் குறைந்து விடும். இதற்கான தென்மாநிலங்களின் எதிர்ப்புகளை வலிமையாக பதிவு செய்வதற்காகத்தான் தென்மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை பதிவு செய்வதிலிருந்து அரசு பின்வாங்கியுள்ளது.
நிதி அமைச்சர் பங்கேற்க வேண்டும்
மத்திய அரசின் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அஞ்சுகிறது. பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசின் பினாமி அரசு, தமிழகத்தின் மீதமுள்ள உரிமைகளையும் அடகு வைக்கத்தான் போகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.