பெங்களூர் அம்ருதா யார்... தமிழக அரசு விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தகவல்
பெங்களூர் அம்ருதா யார் என்பது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
சென்னை: பெங்களூர் அம்ருதா யார் என்பது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த விசாரணை பிப்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பவர் ஜெயலலிதாவுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருத்தா வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் சோபன் பாபுவை தந்தை என்று கோராதது ஏன் என்றும் அவர் கேட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெங்களூர் அம்ருதா யார் என்பது குறித்து விசாரித்து வருவதாக தமிழக அரசு தலைைம வழக்கறிஞர், நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும் அம்ருதா வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் காலஅவகாசம் கோரினார். அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில் அம்ருதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து பிப்ரவரி 3-ஆம் தேதி இந்த கோர்ட் முடிவு செய்யும்.
தமிழக அரசு, தீபா, தீபக் ஆகிய மூவரும் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.