என் மீது வழக்குப் போட்டு என்னை பயப்படுத்த தமிழக அரசு நினைக்கிறது : தங்கத்தமிழ்ச்செல்வன்
என் மீது வழக்குப் போட்டு என்னை பயப்படுத்த தமிழக அரசு நினைக்கிறது என்று தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி : என் மீது வழக்குப் போட்டு மிரட்ட தமிழக அரசு நினைக்கிறது. அடுத்து என்னை கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்று அமமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக் கூட்டம் தேனியில் நடந்தது. இதில் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், எம் எல் ஏ தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்காக நான் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது செல்லமேஸ்வரர் உட்பட பல நீதிபதிகள் குற்றம்சாட்டியபோது, அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்குத் தொடரவில்லை.
அதே போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் அமைக்காத மத்திய அரசு மீது ஏன் அவமதிப்பு வழக்குத் தொடரவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத தமிழக அரசு மீது ஏன் அவமதிப்பு வழக்குத் தொடரப்படவில்லை.
ஆனால், எம் எல் ஏ இல்லாமல் தொகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பேசியதற்கு, அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அடுத்து என்னை கைது செய்ய தமிழக அரசு முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.