கஜா புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அரசு முழுமையாக உதவவில்லை.. கமல் தாக்கு
கொடைக்கானல் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் செல்லவே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
கஜா புயலால் கொடைக்கானலில் பல்வேறு மரங்கள் சாய்ந்த நிலையில் வீடுகளின் மேற்கூரைகளும் சேதம் அடைந்தன. இந்நிலையில் புயல் சேதங்களை நாகை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனரும், நடிகருமான கமலஹாசன் நேரிடையாக சென்று பார்வையிட்டு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பார்வையிட்டார். பின்னர் பெருமாள்மலை பகுதிக்குச் சென்றார். அங்கு பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களிடம் உரையாடிய அவர், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
யாரும் வரவில்லை
அப்போது கூடியிருந்த மக்கள் புயலால் விழுந்திருக்கும் மரங்களை அப்புறப்படுத்த யாரும் வரவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
காபி, வாழை பாதிப்பு
அதன்பின்னர், குருசரடி எனும் பகுதியில் காபி, வாழை மர விவசாயிகளை சந்தித்தார். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக கமலிடம் மக்கள் தெரிவித்தனர்.
கவலையுடன் பேசிய தள்ளுவண்டிப் பெண்
அப்போது, அந்த பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள் விற்று கொண்டிருக்கும் விஜயலட்சுமி என்பவர், கமலஹாசனை சந்தித்தார். அண்மையில் ஏற்பட்ட கஜா புயலினால் தமது வண்டி சேதமடைந்து, வாழ்வையும் இழந்து தவிப்பதாக கவலையுடன் கூறினார்.
அதிகாரிகள் போகவே இல்லை
அதன் பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் செல்லவே இல்லை என்பதை இந்த மக்களை பார்த்த பிறகு தெரிகிறது.
உதவி செய்ய வேண்டும்
அவர்கள் ஏன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை என்று தெரியவில்லை. எது எப்படி இருப்பினும், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார் கமல்ஹாசன்.