67 ஆயுள் கைதிகளை விடுதலை- சட்டசபையில் அறிவிக்காதது ஏன்? ஸ்டாலின் கேள்வி
எம் ஜி ஆர் நூற்றாண்டுவிழாவையொட்டி 67 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: எம் ஜி ஆர் நூற்றாண்டுவிழாவையொட்டி 67 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டசபையில் அறிவிக்காமல் அறிக்கையாக வெளியிட்டது ஏன்? என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து அதற்கான செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 25.02.2018 அன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அவர்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆயுள் கைதிகள் விடுதலை குறித்து சட்டசபையில் தெரிவிக்காமல் அறிக்கை வெளியிட்டது ஏன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.